முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறவற நூற்றாண்டு விழா

 



விபுலாநந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். மயில்வாகனன் என்பது அவரது இயற்பெயர். 1921-ல் ராமகிருஷ்ண மடத்தில் இணைந்து பிரபோத சைதன்யர் ஆகப்  பெயர் மாற்றம் பெற்றார். 1921-ல் விபுலாநந்தர் என்று பெயர் பெற்றுத் துறவறம் மேற்கொண்டார். திண்ணைப் பள்ளியில் குஞ்சித்தம்பி என்பவரிடம் எழுத்தறிவிப்புப் பெற்றார். ஆங்கிலக் கல்வி கற்கையில் கூடவே பருத்தித்துறை காரைதீவுப்  பிள்ளையார் கோயில் பூசகராக இருந்த வைத்தியநாத தேசிகரிடம் சமஸ்கிருதமும் தமிழும் பயின்றார்.

ஆரம்பக் கல்வியினை,  கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் பயின்றார். அங்கே பிரான்ஸ் நாட்டவரான ரெவெ போனேல் என்பவர் விபுலாநந்தருக்குக் கணிதத்தில் ஆர்வத்தை உருவாக்கினார். தன் 16-வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் வென்ற பின்னர் புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார். விபுலானந்தர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். காரைதீவு வைத்திலிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர், கயிலாயபிள்ளை ஆகியோர் விபுலாநந்தரின் தமிழாசிரியராகக் குறிப்பிடப்படுகிறார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

1912-ல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1915-ல் கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-ல் அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்தார். 1919-ல் லண்டன் பி.எஸ்.ஸி தேர்விலும் வென்றார். 1917-ம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகப் பணியாற்றினார் 1928-ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1926-1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண மிஷன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் பணியாற்றினார்.

1916-ல் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தன் வீட்டில் விவேகானந்த சபையைக் கலைப்புலவர் நவரத்தினம், செ.மயில்வாகனம், சி.முத்துக்குமாரு ஆகியோரின் உதவியுடன் தொடங்கினார். 1917-ல் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தலைவர் சர்வானந்தர் இலங்கை வந்தபோது இந்த அமைப்பு அவருக்கான வரவேற்புப் பணிகளைச் செய்தது. இச்சபையின் தூண்டுதலால் ராமகிருஷ்ணமடம் யாழ்ப்பாணத்தில் நலிவுற்ற நிலையில் இருந்த வைத்தீஸ்வர வித்தியாலயத்தை ஏற்றுக்கொண்டு நடத்தலாயிற்று. மானிப்பாயில் பணியாற்றுகையில் யோகசுவாமிகள் என்னும் துறவியிடமிருந்து சில யோகப்பயிற்சிகளைப் பெற்றார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரால் பிரபோத சைதன்யர் என்னும் பெயருடன் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் அங்கு பயின்றார். 1924-ம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் விவேகானந்தரின் மாணவர் சுவாமி சிவானந்தரிடம் இருந்து துறவு பெற்றுக்கொண்டார். சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். ஆரம்பக்காலத்தில் சைவசித்தாந்தியாக இருந்தவர் பிற்காலத்தில் முழு வேதாந்தி ஆனார். தான் பயிற்றுவித்த வகுப்புகளில் அனைவருக்கும் ஒரே உணவு, ஒரே இருக்கை என்பதை நடைமுறையில் கொண்டு வந்தார்.

1927-ல் இலங்கை வந்த காந்தியை வரவேற்கும் யாழ்ப்பாண இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தார். 1931-ல் அண்ணாமலைப் பல்கலை தொடங்கப்பட்டது. ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அழைப்புக்கு இணங்க சிதம்பரம் சென்று அப்பதவியை ஏற்றார். 1933-ம் ஆண்டில் ராமகிருஷ்ண நிறுவனங்களை பேணும் பொருட்டு மீண்டும் இலங்கைக்கே திரும்பினார். 1937-ம் ஆண்டு திருக்கைலாய பயணம் சென்று வந்தார். 1939-ம் ஆண்டு ராமகிருஷ்ணமடத்தின் பிரபுத்த பாரதம் ஆங்கில இதழின் ஆசிரியராக இமயமலை அடிவாரத்தில் இருந்த அல்மோராவில் மாயாவதி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே யாழ்நூல் பணியைத் தொடங்கினார்.

விபுலாநந்தர் வேதாந்த கேசரி (ஆங்கிலம்), பிரபுத்த பாரதா (ஆங்கிலம்), இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்) போன்ற பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் இதழுக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்து கட்டுரைகளை எழுதினார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வின் தேர்வுத்தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் இதழில் இலக்கியக் கட்டுரைகளை எழுதினார்.

விபுலாநந்தர் தமிழில் இலக்கியத் திறனாய்வு தொடங்கிய காலகட்டத்தில் எழுதியவர். மரபிலக்கியம் நவீன இலக்கியம் ஆகிய இரண்டு போக்குகளையும் இணைத்து ஆராய்வதற்கான கோட்பாடுகளை உருவாக்க அவர் முயன்றார். நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம். யவனபுரக்கலைச் செல்வம் , மேற்றிசைச் செல்வம், ஐயமும் அழகும் ,உண்மையும் வடிவும், நிலவும் பொழிலும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் நகரும் ஆகிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை. இலக்கியத்தை ஒட்டுமொத்த தமிழ் நாகரிகத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், உலக நாகரிகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், பிறகலைகளுடன் இணைத்து ஆராயவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார்.

ஆங்கிலவாணி என்னும் தலைப்பில் உள்ள தொகுப்பில் விபுலாநந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் உள்ளன. வால்டர் ஸ்காட் (நீர் நிலைக் கன்னி), டென்னிசன் (இரங்கற்பா), மில்டன், வேர்ட்ஸ்ஒ ர்த், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் அதில் முக்கியமானவை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை விபுலாநந்தர் மதங்க சூளாமணி என்னும் நூலுக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

சுவாமி விபுலானந்தரின் தலைமையில் கலைச் சொல்லாக்ககிக் கழகம் 1934-ல் அமைக்கப்பட்டு 'கலைச்சொற்கள்' என்னும் அகராதி நூல் 1938-ல் சென்னைத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. தமிழில் கலைச்சொற்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் ஒரே பொருளுடன் தொடர்புடைய ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழில் தனிச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தினார். (Mirror = கண்ணாடி, Glass = படிகம்) மொழிபெயர்ப்புப்  பற்றிய அவரது கருத்து நெகிழ்ச்சியானது. மூலத்தின் பொருளிலிருந்து விலகாமல் இருப்பது முக்கியம் என்பது அவரது மொழிபெயர்ப்பியல் கருத்தாக்கம்.

சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, அவருடைய கலைச்சொல்லாக்க முயற்சிகளைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுவாமி விபுலாநந்தருக்கு முன்னரே தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தொடங்கி வைத்த தமிழிசை இயக்கம் உருவாகியிருந்தது. சுவாமி விபுலாநந்தர் 1931-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக ஆனபோது தொல்தமிழர் இசை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ல் இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்த போது 'யாழ் நூல்' என்னும் ஆய்வுநூலை எழுதத் தொடங்கினார். பின்னர் இலங்கையில் பணியாற்றுகையில் எழுதி முடித்தார்.

சுவாமி விபுலாநந்தரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அவர் நாடகவியலுக்கு நவீன இலக்கணம் ஒன்றை அமைக்க முயன்றது. அவர் தமிழ் இலக்கியங்கள் கூறும் நாடகவியல்செய்திகளை ஒட்டி ஷேக்ஸ்பியர் நாடகங்களை எடுத்துக்கொண்டு மதங்கசூளாமணி என்னும் நாடகநூலை இயற்றினார்.

சுவாமி விபுலாநந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு அதில் இணைந்து பணியாற்றி நிறைவடைந்தவர். அவருடைய ஆன்மிகப் பரிணாமம் பற்றிப் பேசும் சி.மௌனகுரு "ஆரம்பத்தில் சித்தாந்தியாகக் காணப்பட்ட சுவாமிகள் பின்னாளில் பழுத்த வேதாந்தியாகக் காட்சி தருகிறார்" என்று வரையறை செய்கிறார். கலாநிதி அருணாசலம் விபுலாநந்தரின் சமயப்பார்வை சைவம், வேதாந்தம் ஆகியவற்றைத் தழுவியதும் அனைத்து மதங்களையும் இணைத்துநோக்கும் சமரசத்தன்மை கொண்டதும் ஆகும் என வரையறை செய்கிறார்.

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். ஜூலை 19, 1947-ல் காலமானார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற தமிழ் அறிஞராக இந்து சமயத்தின் துறவியாக ஒரு சமூக சீர்திருத்தவாதியாகத் தன் வாழ்நாளை எம் சமூகத்திற்காக அர்ப்பணித்த பெருமகன் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அடிகளார். இந்தப் பெருமகன் தன் ஆழ்ந்த அறிவு, ஆன்மிக விழுமியங்கள் மீதான பக்தி மற்றும் கல்வி மற்றும் கலாசாரப் பெருமை என இன்னோரன்ன அம்சங்கள் மூலம் இந்தச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பால் இன்றுவரை  அவர் நினைவுகூரப்படுகிறார்.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆன்மிக வாழ்க்கை தனித்துவமானது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்த இவர்,  ராமகிருஷ்ணா வரிசையின் முதல் இலங்கைத்  தமிழ்ச் சுவாமியானார்,. அவருக்கு சுவாமி விபுலானந்தா என்ற பெயர் இங்குதான் வழங்கப்பட்டது. ஆன்மிக விழுமியங்கள், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகியவற்றைப் பரப்புவதற்காக அவர் அரும்பாடுபட்டார்.

கடந்த ஆண்டு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் துறவு பூண்டு நூற்றாண்டு நிறைவினைக் கண்டுள்ளது. இப்பெருமகனாரை நீள நினையும் வகையிலே, யாழ்ப்பாணத்திலே, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறவற நூற்றாண்டு விழாவினை, புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்து மாமன்றம், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்  ஆகியவை இணைந்து எதிர்வரும் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் சிறப்புறக் கொண்டாடவுள்ளது.

வணக்கத்திற்குரிய மதகுருமார்களின் ஆசியுடன், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி – அமைச்சர் கௌரவ கமஹெதர திசாநாயக்க அவர்களது அழைப்பின் பேரில், இலங்கைப் பாராளுமன்றச் சபாநாயகர் கௌரவ வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன   மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கல்விமான்கள், சமய மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளடங்கலான சிறப்பு விருந்தினர்களின் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் 19 ஆம் திகதி ஜூலை மாதம் 2025 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு, ஆரம்ப நிகழ்வாக, யாழ்ப்பாணம், மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில், பிரதம சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் பூஜை ஆராதனைகள் மற்றும் ஆசியுரை இடம்பெற்று, ஆலயத்திலிருந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் திருவுருவப்பட ஊர்வலம், மானிப்பாய் இந்துக் கல்லூரி வரை செல்லவுள்ளது.

 

கல்லூரிப் பிரதான மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வுகளும் முத்தமிழ் அரங்க நிகழ்வுகளும் சுவாமி விபுலாநந்த அடிகளுக்கான நினைவு முத்திரை வெளியீடும், கலை நிகழ்வுகளும்  இடம்பெறவுள்ளன.

அரங்க நிகழ்வுகள் வரிசையிலே, 19.07.2025 மாலை 4.00 – 7.00 வரையிலும்                                             20.07.2025 காலை 9.00 – 12.00 வரையிலும்  அன்றைய தினம் மாலை 4.00 – 7.00 வரையிலும்  நல்லூர், ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இசையரங்கு, ஆய்வரங்கு மற்றும் இயலரங்கு முதலானவை இடம்பெறவுள்ளன.

விபுலாநந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சியும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விற்பனையும் 19.07.2025  மற்றும் 20.07.2025 ஆகிய தினங்களில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வினைக் காண, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

 

பணிப்பாளர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post